புத்தாண்டு உரையில் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த கிம்!

உலக நாடுகள் முன்னர் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்ற வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடை மற்றும் அழுத்தங்களை அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாவிட்டால் வேறு மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், அமெரிக்கா தான் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

‘எங்களது இறையாண்மை மற்றும் நலனை பாதுகாக்க வேறு வழிகளை நாட வேண்டியிருக்கும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

அப்போது சர்வதேச சமூகம் வரவேற்கும் முடிவு எடுக்கப்படும். தென்கொரியா-அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்புகொண்டபோது, அதனை வரவேற்றாலும் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே பொருளாதார தடை விலக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.