திருமணம் முடிந்த 3 வாரங்களில் அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்!

தெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா என்கிற 22 வயது இளம்பெண் கடந்த சில வருடங்களாக, அதேகிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் (26) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனுராதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 3ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஐதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டு அங்கேயே 3 வாரம் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய ஜோடி, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த தகவலை அறிந்து கொண்ட அனுராதாவின் பெற்றோர் சத்னா மற்றும் லட்சுமி, தங்களுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு வீட்டினுள் இருந்த அனுராதவை வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு நிர்மல் மாவட்டத்தில் மல்லபூர் கிராமத்தில் நள்ளிரவில் எரித்து சாம்பலாக்கிவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் லக்ஷ்மன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அனுராதாவின் பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.