சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களை கைப்பற்றியது.
தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்கிறார். மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைய செய்து அம்ம்மாநில கட்சியான மிசோ கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
நேற்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில், மத்திய பிரதேச மாநிலத்திற்கு கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உடன் முதல் கோப்பில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.
இதேபோல், நேற்று மாலை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் பதவி ஏற்று கொண்டார். பதவியேற்றவுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.6,100 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 என நிர்ணயித்தும் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பூபேஷ் பாகெல், நெல்லுக்கு தற்போது ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.1,750 வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து 750 ரூபாய் கூடுதலாக உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.






