6 வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த கட்டாய திருமணம்: 12 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18). இவருக்கு 6 வயதாக இருக்கும் போது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டது.

பிண்டுதேவிக்கு வயது ஏற ஏற விபரம் தெரிய ஆரம்பித்த நிலையில் கணவரை பிரிய விரும்பி விவாகரத்து கோரியுள்ளார்.

ஆனால் கணவர் குடும்பத்தார், பிண்டுதேவி மற்றும் அவர் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது 18 வயதான பிண்டுதேவி, சாரதி என்ற அரசு சாரா நிறுவனத்திடம் இது சம்மந்தமாக உதவி கோரினார்.

இதையடுத்து நிறுவனத்தின் தலைவி மூலம் இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பிண்டுதேவியின் திருமணம் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிண்டுதேவி கூறுகையில், சிறுவயது திருமணத்தின் பிடியில் இருந்து நான் விடுவிக்கப்பட்டேன், இப்போது என் கனவுகளை நிறைவேற்றுவதற்காக பிடித்த படிப்பை படிக்க போகிறேன் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.