இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவின் திருமண பத்திரிகையை சில முக்கிய கோயில்களில் வைத்து பிரார்த்தனை செய்து வருகிறார்.
அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இன்று காலை திருப்பதி சென்ற அவர், அங்கு சாமி சந்நிதியில் திருமண அழைப்பிதழை வைத்து ஏழுமலையானை வணங்கினார்.
இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, தனி ஹெலிகொப்டர் மூலம் மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.
நந்திமண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னிதி, மூலவரான ராமநாதசுவாமி சந்நிதி, பர்வதவர்த்தினி அம்பாள் சந்நிதி ஆகியவற்றில் தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடுசெய்தார். இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு ரூ.55 ஆயிரம் காணிக்கையாக வழங்கினார்.
அம்பானியின் வருகையை முன்னிட்டு, மண்டபம் ஹெலிகொப்டர் இறங்கு தளம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.