50க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பொலிஸ்: விசாரணையில் அதிரடி திருப்பம்

டாக்சி ட்ரைவர் மிரட்டப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸார், வீட்டுக்கு தெரியாமல் ஓடிவரும் ஏராளமான பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் ஒருவருடன் சேர்ந்து ஜெயந்தி (37) என்ற பாலியல் தொழிலாளி பெண், கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதன் (31) என்பவரிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தாக்கியதாக நேற்று புகார் எழுந்தது.

இதுசம்மந்தமாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் பார்த்திபன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தவிட்டனர்.

இதனை தொடர்ந்து பார்த்திபன் மற்றும் ஜெயந்தியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில், வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து ஓடி வரும் பெண்களை கோயம்பேட்டில் அடையாளம் கண்டு அவர்களிடம் நல்லவர் போல நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்களை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் பொய் வழக்கு பதிந்து பொலிஸ் நிலையத்தில் தள்ளிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அந்த இளம்பெண்களும் பாலியல் தொழில் செய்ய ஆர்மபித்துள்ளனர்.

இதுபோன்று ஏராளமான பெண்களை அவர் பாலியல் தொழிலுக்கு தள்ளியிருக்கிறார். அவர்களை அணுகும் வாடிக்கையாளர்கள் பலரிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொள்வதோடு, ஒரு சிலரை அடித்தும் பணம் பிடிங்கியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி ஏற்கனவே ஒரு முறை புகார் எழுந்தபோது, வரும் கமிஷன் பணத்தில் பங்கு வாங்கிக்கொண்ட உயர் அதிகாரிகள், இந்த விவகாரத்தினை மூடி மறைத்து பார்த்திபனை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக வைக்க ஆரம்பித்துள்ளனர்.

கடைகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தல் என பல்வேறு இடங்களில் வாங்கும் கமிஷன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார். அதில் வரும் பணத்தை சரிசமமாக உயர் அதிகாரிகளுக்கும் பகிர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

மேலும், கமிஷன் சரியாக கொடுக்காத இளைஞர்களை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுமையாக தாக்கி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது ஐபிசி 323, 384, 506(1) மற்றும் 3(2)(ஏ), 4(1), 5(1)(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிஸாரே 50க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.