வேறு சாதி வாலிபருடன் திருமணம்: இளம் கர்ப்பிணியை குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்..

வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களின் காதல் விவகாரம் ஜோதியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. முத்துராஜ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஜோதி தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ஜோதி முத்துராஜை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஜோதி கர்ப்பமானார்.

இந்த நிலையில் முத்துராஜ் மற்றும் அவரது பெற்றோரும் வீட்டைவிட்டு வெளியே சென்று இருந்தனர். ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதுபற்றி அறிந்ததும் ஜோதியின் தந்தை கிருஷ்ணய்யா, தாய் வெங்கடலட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்ம ஆகியோர், முத்துராஜின் வீட்டுக்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்து அவளை வீட்டிலிருந்து கடத்தி சென்றனர்.

பின்னர், ஜோதியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர். மேலும் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் கொள்ளேகால் புறநகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடிவருகிறார்கள்.