லண்டன் வீதியில் ரத்தக்கறையுடன் நிர்வாணமாக கத்திகொண்டே ஓடிய நபர்: பரபரப்பு சம்பவம்

தென் கிழக்கு லண்டன் பகுதியில் ஒருவர், உடல் முழுதும் ரத்தக்கறையுடன் நிர்வாணமாக கத்திகொண்டே ஓடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு லண்டனில் பெக்ஹாம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து ஒருவர், “நான் என்னுடைய அம்மாவை கொன்றுவிட்டேன்” என கத்திகொண்டே உடல் முழுவதும் ரத்தக்கறையுடன் தெருவில் ஓடியுள்ளார்.

பால்கனியில் நின்றுகொண்டிருந்த 23 வயது பெண் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டிற்குள் சென்று ஆய்வு மேற்கொண்ட போது 75 வயதான மவ்ரீன் வாட்கின்ஸ் என்ற பெண்மணி உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அவருடைய 55 வயது மகனை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.