கிருஷ்ணகிரியை சேர்ந்த புதுமண தம்பதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில் கர்நாடகாவில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ், இவரும், அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று திருமணம் செய்துகொண்டு ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி முதல் புதுமண தம்பதிகள் இருவரையும் காணவில்லை என நந்தீஷின் சகோதரர் சங்கர், ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் இவர்கள் இருவரையும் தேடி வந்த, நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் தம்பதிகள் சடலங்களாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் மூன்று பேர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்து உள்ளனர்.
இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மாற்று சமுதயத்தை சார்ந்தவர்கள் என்பதால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.