சட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றை கலைத்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட ரீதியானதே என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் தரப்பு நியாயங்களை, சட்ட மா அதிபர் தலைமையிலான குழுவினர் உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பரிசீலனை செய்கின்றது.

சொலிசுட்டர் ஜெனரல் தப்புல லெவேரா, பிரதி சொலிசுட்டர் ஜெனரல் நரீன் புள்ளே, உதவி சொலிசுட்டர் ஜெனரல்களான இந்திகா, தெமுனி டி சில்வா உள்ளிட்டவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் தங்களது நியாயங்களை முன்வைத்து வருகின்றனர்.

தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கு கால அவகாசம் தருமாறு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் கோரியதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற விசாரணை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.