எங்கள் உப்பைத்தின்று ஜனாதிபதியாக வந்து இன்று எங்களையே கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்;
இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து பதினான்கு ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும், இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான்.
அதனை கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். அதேவேளை பேரம் பேச வேண்டும் இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் இவரை சந்தித்தார். ஏன் இவரை சந்தித்தார் என்று.
எல்லோரையும் நாம் சந்திப்போம்.ஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்க மாட்டோம். சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும்.
இந் நிலையில் சிறுபிள்ளைத்தனமாக, நாமல் ராஜபக்ச.. அவர் சிறுபிள்ளை தான். இன்று காலையில் டுவிட்டரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று சொல்லியிருக்கின்றார்.
கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள் . அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்து கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானது நியாயமானது அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக்கூடாது.
நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம்.
எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனை சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடுதான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள் மற்றவர்களெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள்.
பாராளுமன்றத்தை திறக்காவிட்டால் திறப்போம், நாம் அங்கு செல்வோம், பெரும்பான்மையை அங்கே காட்டுவோம், அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார்.
இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்?
எங்களுடைய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டுவந்தோம்.?தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாயே.. ஆறடி நிலத்திற்குள் போகாமல் உன்னை காப்பாற்றியது நாங்கள் அல்லவா.
இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய், இது உனது அழிவிற்கான ஆரம்பம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.