2015 ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்த போதும், தற்போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவருவதற்கு ஆயத்தமாகியுள்ளது.
ஈரான் நாட்டின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித் துறைகளை இலக்காக கொண்டு, “இதுவரை இல்லாத அளவில் ஈரான் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகள் இவை” என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மே மாதம் தெரிவித்தார்.