தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் இன்று திருநங்கை ஸ்ரீஜா மற்றும் அருண்குமார் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்தை நடத்துவதற்கு அனுமதித்த அதிகாரிகள் அனுமதி ரசீது கொடுத்த பிறகும் கோவில் அதிகாரிகள் திருமணத்தை நடத்த மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் சிவன் கோவிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர், தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமாருக்கும், ஸ்ரீஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 1 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது காதல் விவரம் வீட்டுக்கு தெரியவரவே இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதன்படி இவர்களின் பெற்றோர்கள் செய்த ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். இதற்காக திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வினியோகிக்கப்பட்ட நிலையில், திருக்கோவில் அலுவலகத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக திருக்கோவில் அலுவலகத்தில் ரூ 600 முன்பணம் செலுத்தி அருண்குமார், ஸ்ரீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை திருமணம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளுடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் சிவன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்திற்கு சென்று திருமண பதிவினை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். அப்போது திருக்கோவில் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அருண்குமார், ஸ்ரீஜா திருமணத்தை கோவிலில் நடத்த முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அருண்குமார் ஸ்ரீஜா உள்பட வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஏன் திருமணத்தை நடத்த முடியாது என்பது குறித்து அவர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு, அதிகாரிகள் தகுந்த பதிலளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திருக்கோவில் அலுவலகத்தைச் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் திருக்கோவில் அலுவலகத்திற்கு விரைந்து வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சலசலப்புகளுக்கு இடையே அருள்குமார் ஸ்ரீஜா திருமணம் பகல் 11.45 மணியளவில் நடைபெற்றது. அப்பொழுது உடன் வந்திருந்த திருநங்கைகள் உறவினர்கள் உள்பட அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.