சென்னை வடபழனியில் பெண் பார்க்க சென்ற தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரை, 4 பெண்கள் சேர்ந்து மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த காளிசரண் (42), தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் திருமணத்திற்கு பெண் தேவை என திருமண இணையதளம் ஒன்றில் தன்னுடைய முழு விவரங்கள், ஜாதகம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் காளிசரணுக்கு நேற்று ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய பெண், உங்களுடைய விவரங்களை இணையதளத்தில் பார்த்தோம். உங்களை பெண்ணுக்கு பிடித்துவிட்டது. நேரில் சந்திக்க வேண்டும். நாளை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலுக்கு வந்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்கள் பெண் கிடைக்காமல் விரக்தியில் இருந்த காளிசரண் போன் வந்ததும், உற்சாக மிகுதியில் வேகமாக கிளம்பி சென்றுள்ளார். அங்கு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், உள்ளே உறவினர்கள் இருக்கிறார்கள் என கூறி, அறை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அறையினுள் 3 பெண்கள் இருந்துள்ளார்கள். அவர்கள், “நாங்கள் பொலிஸ். உன் மீது புகார் வந்துள்ளது” என மிரட்ட துவங்கியதோடு, அவரிடம் இருந்த ஐ போன், நகைகள், ஏ.டி.எம் கார்டு, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து காளிசரண் வடபழனி குற்றப்பிரிவு பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார். தற்போது இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.