கொடூர செயலால் உலகையே அதிரவைத்த கல்லூரி மாணவன்!

கிரிமியா நாட்டில் கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சக மாணவர்களை கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிமியாவில் விலடிஸ்லாவ் ரோசலியாகோவ் என்ற 18 வயது நிறைந்த மாணவர்,கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சகமாணவர்களை துப்பாக்கியால் பயங்கரமாக சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.பின்னர் கல்லூரி உணவு விடுதியிலேயே தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.மேலும் 5 பேர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அவன் முன்னாள் காதலியை சந்திக்க சென்றிருந்தான், அந்த பெண் மீது உள்ள ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும், மற்றொரு மாணவன் அவன் கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருந்தான், எப்பொழுது ஆர்வமாக விளையாடிக்கொண்டே இருப்பான், அந்த தாக்கத்தில் இப்படி செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்கள் .