தெலுங்கானா மாநிலத்தில் உயர்ந்த சாதி பெண்ணை காதலித்து ஓடிப்போக முடிவு செய்த நபரை அப்பெண்ணின் கொடூரமாக அடித்துள்ளனர்.
தாழ்ந்த சாதியை சேர்ந்த சாய்கிரண் என்பவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள உயர்ந்த சாதி பெண் ஹரிதாவை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பள்ளியில் இருந்தே ஒருவருக்கொருவர் தெரியும். இந்நிலையில், ஹரிதாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, நான் இப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என தனது அம்மாவின் கூறியுள்ளார் சாய்கிரண்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த சாய்கிரணின் தாய், அவள் உயர்ந்தசாதியை சேர்ந்தவள், இது நமது குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது, அப்பெண்ணை கொண்டுபோய் அவளது வீட்டில் விட்டுவிடு என கூறியுள்ளார்.
இதற்கு சாய்கிரண் மறுக்கவே, ஹரிதாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டில் கொண்டுபோய்விட்டு, நடந்தவை குறித்து விளக்கம் அளித்து, இப்படியொரு சம்பவம் நடந்ததை மறந்துவிடுங்கள் என அப்பெண்ணின் வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளார் சாய்கிரணின் தாய்.
இப்படி ஒரு சம்பவத்தை அடுத்து ஹரிதாவை வீட்டுக்குள் அடைத்துவைத்த பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த தகவலை ஹரிதா, காதலன் சாய்கிரணிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், ஓடிப்போக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஹரிதா குடும்பத்தினர் ஒரு வாரமாக சாய்கிரணை நோட்டம் விட்டுள்ளனர். இவர்கள் ஓடிப்போக இருப்பதை அறிந்துகொண்ட ஹரிதாவின் பெற்றோர், ஆட்களை ஏற்பாடு செய்து சாய்கிரணை அடித்து உதைத்துள்ளனர்.
கண் மற்றும் கால்களை உடைத்தும், செருப்பால் அடித்தும், தாழ்ந்த சாதி நபருக்கு எங்கள் உயர்ந்த சாதி பெண் வேண்டுமா என கேட்டு அடித்ததில், சாய்கிரண் சம்பவ இடத்தில் சுயநினைவை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹரிதாவின் பெற்றோர் மீதும் புகார் அளித்துள்ளதையடுத்து, ஹரிதாவின் தந்தையிடம் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.