இந்துக் கோவிலுக்கு சென்று விசேட வழிபாடு செய்த நாமல் ராஜபக்ஷ

குரு பகவான் நேற்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறும் நிகழ்வை உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்கள் குரு பெயர்ச்சியாக வழிபட்டார்கள்.

இதை முன்னிட்டு அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.குரு மாறும் போது ஒவ்வொரு ராசிக்குமான பலன்களும் மாறுபடும். சிலருக்கு நன்மை பயக்கும், சில ராசிக்காரர்களுக்கு மத்திமம் மற்றும் தீய பலன்கள் கிடைக்கும்.

இதற்கான பரிகாரங்களை செய்வதற்கு அனைவரும் பயபக்தியுடன் ஆலயங்களுக்கு செல்வார்கள்.அந்த வகையில் நேற்று இலங்கையிலும் பலரும் ஆலயங்களை நோக்கி படையெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்துக்கள் மட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் நேற்று ஆலயங்களுக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வகையில், வெள்ளவத்தையில் உள்ள மயூராபதி அம்மன் ஆலயத்தில் குரு பகவானுக்கு நடைபெற்ற மாலை நேர விசேட பூஜை வழிபாடுகளில் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது அவருக்கு விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவருடன் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.