சற்றுமுன் நடந்த சந்திப்பு! பீதியில் அதிமுக!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிமுக அரசுக்கு ஆதரவளித்து வரும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் ஆதரவு நிலையில் உள்ளார்கள்.எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுடன் சேர்த்து அண்மையில் சர்ச்சையில் சிக்கிய கருணாஸ் உள்ளிட்டோரின் பதவியையும் தகுதி நீக்கம் செய்யவும் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் தமிழக அரசியலில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லத்தில் தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், ரத்தினசபாபதி, கதிர்காமு, முருகன், சுப்பிரமணியன், ரங்கசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளார்கள்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக நெஞ்சுவலி என கருணாஸ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கருணாஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சட்டப்பேரவையை கூட்டி தனபாலை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கருணாஸ் தரப்பு மனு சட்டசபை செயலாளரிடம் மனு அளித்துள்ளதால் ஆளுங்கட்சி வட்டாரம் பதற்றத்தில் உள்ளது.

சற்றுமுன் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கருணாஸை மருத்துவமனையில் சந்தித்தார். கருணாஸை சந்தித்து நலம் விசாரித்த பின் ஜெ.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனவும், சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரமில்லை என தீர்ப்பு வந்தால் கருணாஸை நீக்க முடியாது எனவும் அதுவரை சபாநாயகர் அவசரப்பட்டு கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கருணாஸை மையமாக கொண்டு திமுக, தினகரன் எல்லாம் ஓரணியில் திரள்வர்களோ என்ற அச்சம் ஆளுங்கட்சியினரிடையே உருவாகியுள்ளது.