தவறான உறவை நியாயப்படுத்திய கணவன்: தற்கொலை செய்த மனைவியின் உருக்கமான கடிதம்!

தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை விடுத்து, வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனையறிந்த புஷ்பலதா, இதுகுறித்து தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தகாத உறவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தனக்கு சாதமாக சுட்டிக்காட்டிய ஜான் பால், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த புஷ்பலதா, கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் புஷ்பலதா கூறுகையில், ’கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும்போது, எங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார்.

மாலையில் வீடு திரும்பும்போது அழைத்து வருகிறார். இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்திற்கு பின்னர் கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜான் பாலிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பிராங்க்ளின் என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. அதனை மறைத்து தனது மகளை அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மேலும், ஜான் பால் பலமுறை தனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தன் மகளின் சாவுக்கு அவர் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புஷ்பலதாவின் பெற்றொர் செல்வம்-சரசம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.