இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்கு கட்டுப்பட்டதல்ல. அதுவும் ஒரு தனியார் நிறுவனத்தை போல இயங்கி வரும் அமைப்பு என்று கூறப்பட்டு வந்தது.
அதன் மூலம்வரும் வருமானம், அதன் இயக்குனர்கள் குழு போன்ற எதிலுமே அரசின் தலையீடு இல்லை. ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக பி.சி.சி.ஐ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மற்ற விளையாட்டுகளை போல இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கி இயங்குவது இல்லை. இதனால் வீரர்கள் தேர்வில் பல முறைகேடுகள் அரங்கேறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கீதா ராணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேள்வியெழுப்பியிருந்தார்.
அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குறித்தும் அதற்குக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு அவர் எதிர்பார்த்த பதில் வரவில்லை. இதனை தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அப்போது தான் பி.சி.சி.ஐ அமைப்பை இனி தகவல் அறியும் உரிமை வரம்புக்குள் கொண்டுவந்தால் என்ன என்ற சந்தேகம் எழுந்தது.
அதன் படி இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டதாக பி.சி.சி.ஐ இயங்கும்.
பி.சி.சி.ஐ செயல்பாடுகள் குறித்து மக்கள் மனு மூலமாக கேட்கும் கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்.
வழங்கா விட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இதன் மூலமாக இந்திய அணியின் செயல்பாடுகள் வரை கூட கேள்வியெழுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.