புரட்டாசி 2வது சனிக்கிழமை..! இன்று என்ன… எப்படி செய்ய வேண்டும்.!!

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை பல்வேறு பண்டிகை வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ் மாதங்களில் ஆறாவது மாதம் புரட்டாசி மாதம் ஆகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

பொதுவாகவே சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இந்த மாத சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது முறையாகும்.

வழிபடும் முறை :

பூஜை அறையில் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும்.

பச்சரிசி மாவை சலித்து, மாவினாலேயே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு உண்டாகும்.

சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபட வேண்டும்.