பிளஸ் 1 மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக்கோரி பெற்றோர், உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்திய போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ‘அ’ பிரிவில் உயிரியல் கணக்கு பாடப்பிரிவில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண் பிரஷாத் என்ற மாணவர் கடந்த 3ம் தேதி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதற்காண காரணம் குறித்து முதலில் பெற்றோருக்கு தெரியவில்லை. பின்னர் நேற்று அருண் பிரஷாந்த் புத்தகப்பையை பெற்றோர் சுத்தம் செய்தபோது அதில் தன் தற்கொலைக்கு காரணம் என மாணவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
அதில், ஆசிரியர்கள் எடுக்கும் பாட முறை தனக்கு புரியவில்லை என்றும், கேள்வி கேட்டால் திட்டுவதாகவும் அதேபோல் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் அவதூறாக பேசி வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் இதற்கு காரணம் கணித ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் மற்றும் 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த கடித்ததுடன் பள்ளிக்கு இன்று வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் இருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை அருண் பிரசாந்த் பெற்றோர், உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆசிரியர் காயம் அடைந்து 108 ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அறிவியல் ஆசிரியர் இருந்த அறையையும் கற்கலால் தாக்கினர். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவன் அருண் பிரஷாந்த் தற்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் ஆசிரியர்கள் மீது விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை அருண் பிரசாந்த் தரப்பினர் கைவிட்டு கலைந்து சென்றனர்.






