மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.!

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருப்பெயர்தக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி இவருக்கு வயது 32. இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் ஊருக்கு திரும்பிவந்தபின் இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ராஜீவ் காந்தி 9 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். இதையடுத்து ராஜீவ் காந்திக்கும், கல்பனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி அவரது மனைவி கல்பனாவுடன் சென்றுள்ளார். பின்னர் கல்பனாவை அவரது பெற்றோரின் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜீவ்காந்தி மட்டும் உளுந்தூர்பேட்டைக்கு பேருந்தில் வந்தடைந்தார். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் பகுதியில் சாலை ஓரமாக ராஜீவ்காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் சாலை ஓரம் சென்று கொண்டிருந்த ராஜீவ்காந்தி மீது மோதியது. இதில் ராஜீவ்காந்தி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுனரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர். விபத்து குறித்து கார் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் மனைவி கல்பனா கர்ப்பிணியாக உள்ளார் என்பது பெரும் சோகத்திற்குரியது. திருமணமான 9 மாதத்தில் ராஜீவ்காந்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவத்தால் அவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.