`தினமும் போதை மருந்து.. பாலியல் வேதனை!’ – காவலாளியின் பிடியில் சிக்கிய சிறுமியின் வாக்குமூலம்

16 வயது சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த நபரை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

வறுமையில் பிடியால் தவித்துவந்த குடும்பத்திற்கு ஆறுதல்கரம் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரின் அனுமதியுடன் சிறுமியை தன்னிடம் அழைத்து வந்திருக்கிறார் முகம்மது ஆலம் மஞ்சார் என்பவர். தற்போது, அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முகம்மது ஆலம் மஞ்சாரிடம் இருந்து தப்பித்து வந்த சிறுமி போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், `ஹரியான மாநிலம் குருக்ராம் பகுதியில் இருந்து கடந்த மே மாதம் வங்க தேசத்திற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். இந்தநிலையில்தான், முகம்மது ஆலம் மஞ்சார் எங்களைப் பார்க்க மே 13-ம் தேதி வீட்டிற்கு வந்தார். எங்களது குடும்பச் சூழ்நிலையைக் காரணம் காட்டி , எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். பெற்றோர் அனுமதியுடன் என்னை அவருடன் அழைத்துச் சென்றார். நாங்கள் இருவரும் ரயிலில் டெல்லி வந்தடைந்தோம். அதன் பின்னர், குருக்ராம் பகுதிக்கு என்னை அழைத்துச் சென்ற அவர், நியூ பாலம் விஹார் என்ற இடத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து என்னைத் தங்கவைத்தார். அப்போது எனக்குத் தெரியாது, தன்னை பாலியல் கைதியாக அடிமைப்படுத்துவார் என்று.

முகம்மது மிகவும் கனிவாக என்னிடம் பேசினார். உணவும் கொடுத்தார். அதனுடன், குடிக்க குளிந்த குளிர்பானம் ஒன்றைத் தந்தார். அதைக் குடித்த சில நொடியில் மயக்கமாக வந்தது. அந்த நாளே நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன். அதன் பிறகு, பலமுறை என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்தார். பல நாள் சித்திரவதை அது. தினமும் மாலை நேரத்தில்தான் வருவார். அவர் வரும்போது, உணவு வாங்கிக் கொண்டு வருவார். அதைச் சாப்பிட மறுத்தால் கொடூரமாக அடித்து சாப்பிடக் கட்டாயப்படுத்துவார். என்னை அறையின் உள்ளே வைத்து, வெளியே பூட்டிவிட்டுச் சென்றுவிடுவார். தொடர்ந்து பல நாள்கள் இதே நிலைமைதான். இந்த நிலையில், ஆகஸ்ட் 22-ம் தேதியன்று எதேச்சையாக கதவைத் திறக்க முயன்றேன். அப்போதுதான் தெரிந்தது முகம்மது அறையைப் பூட்ட மறந்து விட்டுச் சென்றுவிட்டார் என. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தித் தப்பித்து விட்டேன். அதன்பிறகு, ஒருவழியாகப் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 16. காவலாளியாகப் பணியாற்றிவரும் முகம்மது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனர்.