இளம் வீரருக்கு அறிவுரை கூறிய சச்சின்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரராக களம் காணவிருக்கும் பிரித்வி ஷாவின் பேட்டிங்கை ஏற்கெனவே பலரும் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். பிரித்வி ஷாவுக்கு 8 வயதாக இருக்கும் போதே, அவரின் இயற்கையான உத்தியை எந்த ஒரு பயிற்சியாளரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்திருப்பது இப்போது சச்சின் டெண்டுல்கர் வாயாலேயே வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சச்சின் தற்போது கூறியதாவது:

எதிர்காலப் பயிற்சியாளர்கள் மாற்றுமாறு கூறினாலும் சரி, பேட்டை பிடிக்கும் விதம், பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நிலையெடுக்கும் உத்தி ஆகியவற்றை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதே என்று நான் ஷாவிடம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளேன். அப்படி யாராவது மாற்றுமாறு உன்னிடம் கூறினால் அவர்களை என்னிடம் அனுப்பிப் பேசச்சொல் என்று ஷா-வுக்கு கூறியிருக்கிறேன்.

பயிற்சியாளர் மூலம் கற்பது நல்லதுதான். ஆனால் அதிகப்படியான கோச்சிங் பயனளிக்காது. இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷல் பிளேயரைப் பார்க்கும் போது எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். ஒரு முழுமையான பேக்கேஜ் என்பது கடவுளின் வரப்பிரசாதம்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரித்வி பேட் செய்வதைப் பார்க்குமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டனர். நான் பிரித்வியிடம் பேசினேன், அவர் ஆட்டத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினேன், என்றார் டெண்டுல்கர். பிறகு நண்பர் ஒருவரிடம் சச்சின் கூறியபோது, “ஆடுவதைப் பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்” என்று கூறியுள்ளார்.

பிரித்வி ஷா 14 முதல்தர ஆட்டங்களில் 1418 ரன்களை 7 சதங்களுடனும் 56,72 என்ற சராசரியிலும் எடுத்துள்ளார்.