சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 19 ஜோடிகளுக்கு அண்மையில் நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில் மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் இடம்பெற்றுள்ளது.
12 சீன ஜோடிகளும், 7 இலங்கை ஜோடிகளும் இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.மணமக்கள் அனைவரும் சீன கலாசார மரபுகளுக்கு அமைய சிவப்பு நிற ஆடைகளை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் அனைவரும், இலங்கையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனாவின் அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தின் பணியாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
“அணை மற்றும் பாதை திட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளோம், நாங்கள் இலங்கையில் திருமணம் செய்தோம்” என்ற தொனிப் பொருளில் இந்த பிரம்மாண்ட திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பாங் சுன்சூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 300 விருந்தினர்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் புதிய திருமணங்கள் மூலம், சீன- இலங்கை ஒத்துழைப்பு எதிர்காலத்தில் பிரகாசமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுன்சூ தெரிவித்துள்ளார்.