“இரண்டு மாதக் கைதி 36 வருடக் கைதியானது எப்படி?”- ஜெய்ப்பூர் முதியவர் கஜானந்த் சோகம்

பாகிஸ்தானில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, வாழ்வின் பெரும்பகுதியை அந்நாட்டுச் சிறைகளிலேயே  கழித்துவிட்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கஜானந்த் சர்மா விடுதலையானதைத் தொடர்ந்து, அவர் தாயகம் திரும்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், கஜானந்த் என்ன குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார் என்பதே தெரியவில்லை. மேலும், அவருக்கு பாகிஸ்தானில் அளிக்கப்பட்ட தண்டனைக் காலம் வெறும் 2 மாதம் மட்டுமே. ஆனால், தூதரகத் தொடர்பின்மையால், அவர் இத்தனை ஆண்டுகள் அந்நாட்டு சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பரஸ்பரம் இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எதிர் நாடுகளின் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். குறிப்பிட்ட ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியக் கைதிகளை விடுதலை செய்து, இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானும், அந்நாட்டுக் கைதிகளை இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடமும் ஒப்படைப்பார்கள். இந்த நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது.

கஜானந்த் சர்மா

அந்தவகையில், பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி (ஆகஸ்ட் 14), இந்தியாவின் கஜானந்த் சர்மா, ஹர்ஜிந்தர் சிங் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்தியர்களை விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்தது. விடுதலை செய்யப்பட்ட கைதிகள், இருநாட்டு எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்குப் பதில் நடவடிக்கையாக, இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழு கைதிகளை இந்திய அரசு விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தான் விடுதலை செய்த கைதிகளில் 27 பேர், இந்திய மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு விடுதலையான 30 இந்தியக் கைதிகளில் கஜானந்தும் ஒருவர். விடுதலையான கஜானந்த், நேற்று இந்தியா – பாகிஸ்தான் எல்லையான அட்டாரி – வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர். இந்தியா திரும்பிய கஜானந்த் சர்மாவின் கதையைப் பார்ப்போம்….

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கஜானந்த் சர்மா. இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பகுதியில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் எப்படி பாகிஸ்தானுக்குச் சென்றார்; என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. அது தொடர்பான விவரம் ஏதும் வெளியாகவில்லை.

என்றாலும் தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் கஜானந்த்-க்கு 2 மாதம் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தை கஜானந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் அணுகி, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், தகவல்களை பரிமாறிக் கொள்வதிலும் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இவ்வளவு காலம் அவர் சிறையில் கழிக்க நேர்ந்ததாகத் தெரிகிறது.

சுமார் 36 ஆண்டுகள் அந்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் கஜானந்த் சர்மா அடைக்கப்பட்டிருந்தார் என்ற தகவலே பி.டி.ஐ. செய்தி மூலம்தான் தெரியவந்துள்ளது. இத்தகவலை ஜெய்ப்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரை மேற்கோள்காட்டி, பி.டி.ஐ. தகவல் வெளியிட்டுள்ளது.

மிகவும் வயதானவராகத் தோற்றமளிக்கும் கஜானந்த் சர்மா, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தாய் நாட்டில் கால் வைத்ததும் தன்னை மீறிக் கதறி அழுதார். கஜானந்த் உடன் பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்டவரான பெரோஸ்பூரைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங், “கஜானந்த்-க்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளாக அவர் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருந்துள்ளார். அவருடன் கடந்த 15 மாதங்களாக ஒரே சிறையில் நானும் அடைக்கப்பட்டிருந்தேன். அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை, நானும் என்னுடன் இருந்தவர்களும் கவனித்துக் கொண்டோம்” என்றார்.

ஏதுமறியா அப்பாவிகள் சிலர், இதுபோன்ற தருணங்களில் காரணமே இல்லாமல் அண்டை நாட்டில் சிக்கிக் கொள்வதுண்டு. முதலில் மொழிப் பிரச்னை, அடுத்ததாக அதிகாரிகளை அணுகி விடுதலையாவது எப்படி என்ற விழிப்புஉணர்வு இல்லாத நிலை, அடுத்ததாக தங்கள் உறவினர் என்ன ஆனார் என்பதை அறியாமல், யாரை அணுகித் தகவல்களைப் பெறுவது என்பது தெரியாமல் இருந்து விடுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற அப்பாவிகள், சிறையில் வாழ்க்கையைக் கழித்துவிடும் கோர நிகழ்வுகள் நடைபெற்று விடுகின்றன.

இதுபோன்ற சம்பவங்களில் தவறு யாருடையது. கஜானந்த் போன்று இன்னும் எத்தனை பேர், எந்தெந்த நாடுகளில் எல்லாம் பாதிக்கப்பட்டு, சிறையில் தவிக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். தவிர, தவறாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் வாடிய கஜானந்த்-க்கு நீதி கிடைக்க மனித உரிமை ஆணையம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்….!