வெளிநாடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட மணல் புயல் – இலங்கை பெண் பலி

குவைத்தில் வீசிய மணல் புயலில் சிக்கி இலங்கை பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகலை, மடஹபொல பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் பணி பெண்ணாக சென்றுள்ளார் என அவரது கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த பெண் குவைத்தில் சேவை செய்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா பயணித்தில் ஈடுபட்டுள்ளார். பாலைவனம் ஒன்றுக்கு நடுவில் வீசிய மணல் புயலில் சிக்கி அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய தனது மனைவி உயிரிழந்துள்ளதாக முகவர் நிலையம் ஊடாக தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் இதற்கு முன்னர் 3 சந்தர்ப்பங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கடந்த 9ஆம் திகதி விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற மரண விசாரணையில் விபத்தினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.