‘இமெயில் தமிழர்’ சிவா அய்யாத்துரை மீது தாக்குதல்

மெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் செனட் சபைக்குப் போட்டியிடும் சிவா அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

சிவா அய்யாத்துரை

செனட் சபை தேர்தல் நவம்பர் மாதம் 6- ந் தேதி நடைபெறுகிறது. மகாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து தமிழரான சிவா அய்யாத்துரை சுயேச்சையாக போட்டியிடுகிறார். தற்போது மகாசூசெட்ஸ் மாகாணத்தில் செனட் சபை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எலிசபெத் வாரென் உள்ளார். இவரை எதிர்த்துதான் அய்யாத்துரை களம் இறங்குகிறார். கிரேட் பேரிங்டன் என்ற இடத்தில் நேற்று அவர்  கை ஒலிபெருக்கியுடன்  பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதே இடத்தில் எலிசபெத் வாரென் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் இருந்தனர்.

பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அய்யாத்துரையை நோக்கி வந்த அமெரிக்கர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். அந்த அமெரிக்கரை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கர் ஒலிபெருக்கியால் சிவா அய்யாத்துரையின் வாயில் குத்தினார். இதையடுத்து, அய்யாத்துரை ஆதரவாளர்கள் அந்த அமெரிக்கரை கீழே தள்ளிவிட்டுத் தாக்கினர்.  சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த அமெரிக்கரை கைது செய்தனர். சிவா அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சோலாவய் என்று விசாரணையில் தெரியவந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோலவய் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிவா அய்யாத்துரை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கறுப்பு நிறம் கொண்டவர்களைக் கண்டால் அவர்களால் தாங்க முடியவில்லை. அதனால்தான் வெள்ளையர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இமெயிலைக் கண்டுபிடித்த தன்னை தமிழர் என்பதால் புறக்கணிக்கிறார்கள் என்று சிவா அய்யாத்துரை குற்றம் சாட்டியிருந்தார். சிவா அய்யாத்துரை சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர்.