ஸ்ரீதரன் விடுத்துள்ள பகிரங்க சவால்!

இரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் வாங்கியிருந்ததை உறுதிப்படுத்துங்கள் எனவும் அது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்த நிமிடமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழின் வார்த்தை என்னும் வாள் கொண்டு கருத்துக்கள் மோதும் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,

ஆயுதக்குழுக்களாக இருந்தால் என்ன ஆவா குழுக்களாக இருந்தால் என்ன அனைத்திற்கும் இராணுவமே காரணம் எனவும், இராணுவத்தின் துணையுடன் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மதுபானச்சாலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, கிளிநொச்சிக்கு ஒரு மதுபானச்சாலை வேண்டும் என தான் கோரவில்லை எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சிக்கு ஒரு மதுபானசாலை வேண்டும் என கோரியிருந்தார் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இதுதொடர்பில் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம் வினவிய போது: பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் எல்லாம் சரி என்றால் பத்திரிகைகள்தான் அரசியல் நடத்தவேண்டும் என தெரிவித்த ஸ்ரீதரன் முடிந்தால் அதனை உறுதிப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துவாரகேஸ்வரன், சிறீதரன் இரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாங்கியிருந்தார் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறீதரன், தான் அவ்வாறு மதுபானச்சாலைகள் நடாத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை வாங்கியிருந்தது உண்மை என்றால் அதனை உறுதிப்படுத்துங்கள் எனவும் அது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்த நிமிடமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.