“சுகப்படுத்தும் சேவை” 24 மணிநேர அம்புலன்ஸ் சேவை யாழில் ஆரம்பம்

இந்திய அரசின் நிதி உதவியுடன் சுகப்படுத்தும் சேவை (சுவசெரிய) இலவச அம்புலன்ஸ் சேவை வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இந்த அம்புலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் வடக்கு, ஊவா மாகாணங்களில் அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் பொருட்டு 55 புத்தம் புதிய மருத்துவ வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த திட்டத்திற்கென ஆரம்பிக்கப்பட்ட இந்திய மக்களால் சுமார் 22.5 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகளும் மற்றும் மேலதிகமாக ஒரு அம்புலம்ஸ் வண்டியும் என இந்தத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டு இந்த அவசர சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டன. இந்த இலவச அம்புலம்ஸ் சேவைக்கு ஆயிரத்து 500 இளையோருக்கு புதிததாக பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்புலன்ஸ் பைலட்டுகள் மற்றும் அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர் ஆகியோருக்கான நியமனப் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரலை காணொலி தொழில்நுட்பத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1990 என்ற இலக்கத்தினூடாக 24 மணிநேரமும் இந்த அம்புலன்ஸ் சேவையினைப் பெறுக்கொள்ள முடியும்.