போலீஸ்காரர்கள் என்றாலே அஞ்சி ஓடும் காலம் இது. போலீஸாரிடம் உதவி கேட்டால்கூட அவர்களால் நமக்குப் பிரச்னைதான் ஏற்படும் என்கிற அளவுக்குப் பொதுமக்கள் மத்தியில் போலீஸார் பற்றிய எண்ணம் உருவாகியுள்ளது. மனித நேயம் படைத்த பல போலீஸ்காரர்களையும் பார்க்கிறோம். முதியவர்கள் சாலையைக் கடக்க பல நேரங்களில் போலீஸார் உதவுவதைப் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் சென்னையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரு போலீஸ்காரர்கள் செய்த உதவி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இன்று வந்த புறநகர் மின்சார ரயில், சிக்னல் பிரச்னை காரணமாக கோட்டை, பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது. சுமார் 2 மணி நேரமாக சிக்னல் கோளாறு நீடிக்கவே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிச் சென்று விட்டனர். இந்த ரயிலில் அமுதா என்ற கர்ப்பிணிப் பெண்ணும் பயணித்தார். தண்டவாளத்திலிருந்து படி உயரமாக இருந்ததால், அமுதாவால் ரயிலிலிருந்து இறங்கிச் செல்ல முடியவில்லை. நீண்ட நேரமாக அமுதா ரயிலிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். இந்த சமயத்தில் அங்கே வந்த போலீஸ்காரர்கள் தனசேகரன் , மணிகண்டன் ஆகியோர் அமுதாவின் நிலையைப் புரிந்து படிகள் போல நின்று கொண்டனர்.
அமுதா அவர்களின் முதுகில் ஏறி ரயிலிலிருந்து இறங்கினார். அதேபோல், ரயிலில் இறங்க முடியாமல் தவித்த பல முதியவர்கள் இறங்கவும் இரு போலீஸாரும் உதவினர். தக்க சமயத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு அமுதா மற்றும் முதியவர்களுக்கு உதவிய போலீஸ்காரர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தனர்.






