காட்டுப்பாதையூடாக யாத்திரை மேற்கொள்வதற்கு கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி

கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் பயணம் செய்யும் காட்டுப்பாதை உத்தியோக பூர்வமாக இன்று திறந்துவைக்கப்பட்டதுடன், முதற்கட்டமாக 1500பேர் காட்டுப்பாதையூடாக பாதயாத்திரையினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறை வடக்குக், கிழக்குப் பகுதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தீர்த்தோற்சவம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கதிர்காமம் திருத்தலத்தை நோக்கி அதிகமான பக்தர்கள் கால்நடையாக செல்கின்றனர். வடக்கில் இருந்து கடந்த மே மாதம 17 ஆம் திகதி ஆரம்பமான வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினர் உட்பட கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து சென்ற பாதயாத்திரைக்குழுவினர்கள் பலர் உகந்தைமலை முருகன் ஆலயவளாகத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தனர்.

அத்துடன், கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதான நுழைவாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கிழக்கு மாகாண இராணுவ கட்டளை அதிகாரி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து 20 தினங்கள் திறந்திருக்கும் காட்டுப்பாதை ஜீலை 24 ஆம் திகதி மூடப்படவுள்ளது. காட்டுவழிப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்ளும் அடியார்களின் நலன்கருதி குடிநீர், சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் இராணுவத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களம், பிரதேசசபைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகர்கள் அனைவரும் எக்காரணம் கொண்டும் காட்டுக்குள் பொலித்தீன் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் காடுகளில் பொலித்தீன் கொண்டுசென்றதினால் அங்குள்ள வன விலங்குகள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனைக்கருத்தில் கொண்டு பொலித்தீன் பாவனைக்கு வனஜீவராசி திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 25 ஆயிரம் பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் சென்றுள்ளனர். இம் முறையும் கதிர்காமம் செல்பவர்களின் கணக்கெடுப்பு குமண சரணாலயப்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் அதிகளவிலான பக்தர்கள் காட்டுப்பாதையூடாக கதிர்காமம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.