சனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம்! படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!

சனிபகவான் என்றாலே பலரும் அஞ்சி நடுக்கத் தான் செய்கிறார்கள். காரனம் ஏழரை ஆரம்பித்து விடுவது தான்.

ஒருவரை சனி பிடித்து விட்டால் எந்தளவிற்கு ஆட்டி படைக்க முடியுமோ அந்த அளவிற்கு கஷ்டபட வைத்துவிடும். அதுவே சிலருக்கு மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த சனி தான்.

அப்படியிருக்கையில், சனிபகவானுக்கு ஒருவர் கிண்டலாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் தியாக பரவி வருகிறது.

அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது,

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.

புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள் போல.

உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.

உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.

புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.

இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.

அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.

ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.

வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.

அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.

அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது? பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.

உங்களுக்கே தெரியும்… இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.

பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் கொண்டாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும் குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.

உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?

எங்களைப் பார்த்தால் ”இரண்டு வீங்கு வீங்குவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது ?

ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியது போலத்தானே இருக்கிறோம்? வடிவேலைப்போல “அவ்வ்வ்வ்” என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம்?

இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவய்ப்பதற்குத் துணிவீர்கள்?

போதும் போதும்… கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.

வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக….என்று எழுதியுள்ளார்… அந்த முகம் தெரியாத நபர். பாவம் எவ்வளவு கஷ்டப்படிருந்தால் இப்படி எழுதியிருப்பார் அந்த மனுசன்.