வவுனியாவில் கடந்த 25ஆம் திகதி இணைய தளங்கள் இரண்டில் ஊடகப்பணியாளர் ஒருவருக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு பரப்பி செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில், பகிரங்க மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், 26ஆம் திகதி செய்தி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களுக்கும், இணையதளங்களுக்கும் எதிராகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் போது பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி வவுனியாவிலுள்ள ஊடகப்பணியாளர் ஒருவருக்கு எதிராக ஆதாரமற்ற செய்தி வெளியிட்டதுடன், புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கப்பம் கோரி செய்திகள் வெளியிடுவதாகவும் உறவினர்களிடம் சென்று ஊடகவியலாளர்களின் தகவல்கள் திரட்டுவதாகவும் ஆதாரமற்ற செய்தி புகைப்படத்துடன் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து குறித்த ஊடகப்பணியாளர் இவ்வாறான செய்தியால் தனக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆதாரமற்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து 26ஆம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார்.
இன்று செய்தி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த செய்திக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று ஆரம்ப விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைக்கு விசாரணை மாற்றப்பட்டது. பொறுப்பதிகாரியின் கடுமையான விசாரணையின் போது மூவரில் ஒருவர் செய்தி வெளியிட்டதை ஒப்புக்கொண்டதுடன் முறைப்பாடு மேற்கொண்டவரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.
குறித்த இரண்டு இணைய தளங்களில் மறுப்பறிக்கை செய்தியினை வெளியிடுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆதாரமற்ற செய்திகள் வெளியிடும் இணைய தளங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
சமூகத்தின் மாற்றத்திற்குத்தடையாக உள்ள இணைய தளங்கள் அதிகாரிகளினால் தடை செய்யப்படவேண்டும். பொதுமக்கள் இவ்வாறான ஆதாரமற்ற செய்திகள் வெளியிடும் இணையதளப்பாவனையிலிருந்து விடுபடவேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.






