ராமேஸ்வரத்தில் துப்பாக்கி குவியல்! இலங்கையர் கைது..

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர் ஒருவருக்கு சொந்தமான குடியிருப்பில் கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டுகையில் ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதக்குவியல் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பினை கிளப்பியது.

தமிழீழ விடுதலை புலிகள் தங்கள் முகாம்களை ராமேஸ்வரத்தில் அமைத்திருந்தபோது அவர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டவனவையாக மேற்கண்ட ஆயுதக்குவியல் இருந்திடக்கூடுமென தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கக்கூடிய சூழலில் இன்னுமோர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமேஸ்வரம், உச்சிபுளி வலங்காபுரி கடற்கரை பகுதியில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகில் சுற்றித் திரிந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் வைத்திருந்த பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தாரா? என்றும் அகதிகளை ஏற்றிச் செல்ல வந்தவரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்தில் பெருமளவு ஆயுதக் குவியல் கிடைத்த நிலையில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.