அரியாலையில் மாமரத்தில் இருந்து வீழ்ந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர் ஏக்கத்தில் உயிரிழந்தார். மரத்தால் வீழ்ந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கண்டி வீதி அரியாலை யாழ்ப்பாணம் என்னும் முகவரியைச் சேர்ந்த பொன்னுத்துரை சிங்கராசா (வயது-78) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.முதியவர் ஒருவரை அழைத்து மாமரத்தில் ஏற்றி மாங்காய் நேற்றுப் பறித்துள்ளார். மரத்தில் ஏறியவர் கை தவறி கீழே வீழ்ந்துள்ளார். அவசரமாக முச்சக்கர வண்டியை அழைத்து மரத்தால் வீழ்ந்தவரை ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முதியவர் கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உரையாடியுள்ளனர். வைத்தியசாலையை அண்மித்தபோது, காயமடைந்தவரும் முதியவரும் மயக்கமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
மரத்தில் இருந்து வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையிலும் அவரை அழைத்து வந்த முதியவர் இதய பலவீனத்தினால் ஏக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.






