பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வயதெல்லை 45ஆக அதிகரிக்க கோரிக்கை!

நேர்முகப் பரீட்சைகளுக்கு பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பயிலுனர் நேர்முகப் பரீட்சைக்கு பட்டதாரிகளின் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

இந்த வயதெல்லையினை 45ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

35 எனும் வயதெல்லை தேசிய கொள்கையாக இருந்தாலும் இப்போதிருக்கின்ற 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதற்காக தற்காலிகமாகவேனும் வயதெல்லையை 45ஆக அதிகரித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் 2012ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் கூட இன்னும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர், மேலும் நேர்முகப் பரீட்சைக்கு உள்வாங்கப்படும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.