முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். தன் உரையில் ‘மதச்சார்பின்மையே இந்தியாவின் ஆன்மா’ என்று பிராணப் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் பங்கேற்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாகூட பிரணாப் மீது அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதையெல்லாம் மீறி, நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரணாப்பின் உரை தற்போது காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
இணையத்தில் வைரலான போலி புகைப்படம்..
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரணாப் ஆர்.எஸ்.எஸ் பாணி வணக்கம் செய்ததாக போலி புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்தப் புகைப்படத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சேர்ந்து பிரணாப் கறுப்புத் தொப்பி அணிந்து நெஞ்சு வரை கை உயர்த்தி ஆர்.எஸ்.எஸ். பாணியிலான சல்யூட் செய்கிறார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் பிரணாப்பின் மகளுமான ஷர்மிஸ்டா “இதற்காகதான் நான் பயந்தேன். தந்தையை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும் எச்சரித்தேன். ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சிகளின் ’dirty tricks dept’ தீவிரமாக களம் இறங்கி வேலை செய்கிறது” என ட்வீட் செய்திருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பங்கேற்பதற்கு முன், ‘உங்கள் உரை மறக்கடிக்கப்பட்டு விடும். ஆனால், புகைப்படங்கள் பேசும்’ என்று ஷர்மிஸ்டா ட்வீட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.