யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் இருந்த காலப்பகுதியில் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்இ குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையும் வழங்கியிருந்தார்.
இதனால் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் நீதிபதி இளஞ்செழியனின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.இந்த நிலையில், தற்போது தமிழர் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருகோணமலையில் தமது பணிகளை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளார்.இதன்போது ‘கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது’ என்ற கோசத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






