அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான மோசமான விலை அதிகரிப்புக்களையும், அநீதியான வரிச் சுமைகளையும் கண்டித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டம் முற்பகல் -10.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வருகை தந்த நடுத்தர வயதுப் பெண்ணொருவர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு முயற்சித்துள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த சுலோகங்களைச் சுட்டிக்காட்டி’எங்கே உனக்கு விலையேறினது’ யாருக்குப் பம்மாத்துக் காட்டுகிறாய்’ உள்ளிட்ட வசைச் சொற்களால் கடுமையாக ஏசியுள்ளார்.
மேற்படி பெண்ணின் செயற்பாட்டை அவதானித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். குறித்த பெண்ணின் செயற்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை,சிரியா நாட்டில் இடம்பெறும் இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த மார்ச் மாதம்-02 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றபோது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த பெண் விளையாட்டுத் துப்பக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.