மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி அடுத்த மாதம் 6 ஆம் திகதி போர்ட் ஒவ் ஸ்பெய்னில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி இம்மாதம் 30 ஆம் திகதி பயிற்சி போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி க்ரொஸ் ஸ்லெட்டில் ஜூன் மாதம் 14 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் மாதம் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஜ்டவுனில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும்.
இதுவரை இரு அணிகளும் 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்துள்ளடன், இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 3 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. ஏனைய 6 போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்குகின்றார். காயத்திலிருந்து குணமாகியுள்ள சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ், சுரங்க லக்மால் ஆகியோர் இலங்கை குழாமில் அங்கம் வகிக்கின்றனர்.
இரு அணிகளிலும் அதிகமான இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால், இரு அணிகளுக்குமே சவால் மிகுந்த தொடராவே இது அமையும்.