தமிழர்களை படுகொலை செய்ய உதவிய பிரித்தானியா! முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டமை அம்பலம்

இலங்கை போருடன் தொடர்புடைய சுமார் 200 ஆவணங்களை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழித்துள்ளதாக த காடியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தின் போதும் போரின் போதும் இலங்கையின் படையினருக்கு வழங்கிய இரகசிய எம்15 மற்றும் எஸ்ஏஎஸ் என்ற ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்களே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போரின்போது இலங்கை படையினருடன் பிரித்தானிய அரசாங்கம் இணைந்து பணியாற்றியமைக்கான எவ்வித ஆதாரங்களும் தற்போது பிரித்தானிய அரசாங்கத்திடம் இல்லை என்று பொருள்படும் என்று த காடியன் சுட்டிக்காட்டியுள்ளது

பிரித்தானியாவின் 1958ஆம் ஆண்டின் சட்டப்படி வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். எனினும் வரலாற்று ஆவணமாக கருத்தப்படும் இந்த ஆவணங்களை பிரித்தானிய அரசாங்கம் அழித்தமைக்கான காரணம் தொடர்பில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

ஏற்கனவே கென்யாவில் பிரித்தானிய நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களையும் அந்த நாட்டு அரசாங்கம் அழித்தமையை த காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை போருடன் தொடர்புடைய ஆவணங்களை அழித்தமை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சிடம் காடியன் வினவியுள்ளது.

இதன்போது, அவ்வாறான அவசியம் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சினால் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1978 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் தொடர்பான 195 ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காடியன் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆவணங்களில் சுமார் ஒரு இலட்சம் அரிய நூல்களை கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டப்பட்ட வரலாற்று ஆவணமும் உள்ளடங்குவதாக கருதப்படுகிறது. எனினும் எப்போது எங்கே வைத்து இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதை பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் குறித்த வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டமையை ஆட்சேபித்து இலங்கை தொடர்பான நிபுணரும் குற்றவியல்துறை நிபுணருமான ரிச்சல் செய்ஹ் என்பவர், ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பிடம் முறைபாடு செய்துள்ளார்.

இந்த ஆவணங்களை அழிக்கப்பட்டமையை அடுத்து இலங்கையின் போரின்போது காணாமல் போதல் மற்றும் சித்திரவதைகளுக்கு பிரித்தானியா உதவியதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரித்தானியாவின் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்துள்ள லண்டன் கிங்ஸ்டன் தமிழ் தகவல் மையத்தின் செயலாளர் வைரமுத்து வரதகுமார், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த செயல் வருத்தம் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது தமிழர்களுக்கு எதிரான செயல்களுக்கு பிரித்தானியா உதவியதா என்ற விடயம் அதிருப்தியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு போர் ஆரம்பித்தபோது பிரித்தானிய நிபுணர்களை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அழைத்திருந்தார்.

அதன்படி, மார்கிரட் தட்சரின் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய பாதுகாப்பு நிலையமான எம்15ன் பணிப்பாளர் ஜிம் கலாகென் இலங்கைக்கு 1979ஆம் ஆண்டு விஜயம் செய்தார்.

இந்தநிலையில் பிரித்தானியாவினால் இந்த இரண்டு ஆவணங்களும் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக காடியன் குறிப்பிட்டுள்ளது.

இதனைதவிர 1980ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் எஸ்ஏஎஸ் படையினர் இலங்கை படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக இலங்கைக்கு வந்தனர் என்ற ஆவணமும் பிரித்தானிய அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாக காடியன் தெரிவித்துள்ளது.