தூத்துக்குடியில் இறந்த உறவுகளை அஞ்சலித்த யாழ்ப்பாணம்!

தமிழ் நாடு தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ள்ளது.

குறித்த அஞ்சலி நினைவேந்தல் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் குறித்த ஆன்ம ஈடேற்ற நிகழ்வு, மெழுகுவர்த்தி ஏந்திய நினைவேந்தலாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மக்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்த அதே வேளை, மக்களை படைகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி சுட்டுப் படுகொலை செய்துள்ளமையையும் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.

இதேவேளை தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் இன்றைய தினமும் பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒருவர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.