யாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் மின்னல் தாக்கம்! அச்சத்தில் மாணவிகள்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளது.

குறித்த கணினி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன், இலங்கை மின்சார சபையினரும் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டு தீயை அணைத்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்த நிலையில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்தைப் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.