சமூக வலைதளங்களில் வைரலாகும் ரஜினியின் 2.0 படத்தின் கதை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.

சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.

மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படம் என்கிறார்கள். பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார்.

படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகனை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படுமாம்.