`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ – தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

தமிழகத்துக்கு

சி.எம்.எஸ் இந்திய நிறுவனம் ஊழல் நிறைந்த மாநிலங்கள் குறித்து `ஊழல் ஆய்வு 2018’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. அதில் தமிழகம் முதலிடத்திலும், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

இந்த ஆய்வானது, ஆந்திரா, பீகார், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் செயல்படும் 11 அரசு சேவை துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காவல் துறை, மின்சாரம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, நில ஆவணங்கள் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் ஊழல் நடப்பதாக ஆய்வின் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து சிஎம்எஸ்-இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது,  `அரசு வழங்கும் சேவைகளை பொது மக்கள் பெறுவதில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 13 மாநிலங்களில் ஆய்வு நடத்தினோம். மாநிலங்கள் வாரியாக அட்டவணையைத் தயாரித்தோம். ஊழல் பட்டியலில், மற்ற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்வது, ஆதார் அட்டை பெறுவது, வாக்காளர் அட்டைப் பெறுவது பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகளை வழங்க அதிகளவில் லஞ்சம் பெறும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

தமிழகத்தை அடுத்து தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை. மேலோட்டமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. இந்த மாநிலங்களை ஒப்பிடுகையில், மகாராஷ்ட்ரா, பீகார், தெலங்கானா போன்ற மாநில மக்கள் ஊழலைக் கடுமையாக எதிர்க்கின்றனர்’ என்றார்.