வடகொரியா மற்றும் தென் கொரியா இருநாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாட்டில் வடகொரியா ஜனாதிபதி கிம் தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்து வந்தார்.
கொரியப்போர் 1953-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது.
அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்து தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது.
அதன் பின் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினர் சந்தித்து பேசினர். இதனால் இரு நாடுகளுக்கிடயேயான பகை விலகத் துவங்கியது.
இதையடுத்து இன்று வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும், தென் கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த மாநாடு இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வடகொரியா ஜனாதிபதி கிம் அங்கு புறப்பட்டு சென்றார்.
சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு இடத்தை அடைந்த கிம்மை, சிவப்பு கம்பளம் மற்று இராணுவ மரியாதையுடன் தென் கொரியா ஜனாதிபதி Moon Jae புன்னகை சிரிப்புடன் வரவேற்றார். அப்போது கிம் அவரைது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்து வந்தார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக கடந்த 1953-ஆம் ஆண்டு கொரிய போர் முற்றுகை ஒப்பந்தம் குறித்து கையெழுத்திடப்பட்டது குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், அதன் பின் சமீபத்தில் அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதில்லை என கிம் கூறியதால் அதைப் பற்றியும் பேச்சு வார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த மாநாட்டைத் தொடர்ந்து பிற்பகலில் மர நடவு விழா ஒன்று இருப்பதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுவரையிலும் நடந்தது என்ன?
இந்த சந்திப்பு குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்
- இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் போது தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவின் எல்லைக்குள் சென்று கைகுலுக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து தென் கொரிய சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
- தென் கொரிய ஜனாதிபதி முன்னை வட கொரியாவிற்கு அழைத்துள்ளார் கிம். மேலும் இம்மாதிரியான வரவேற்பு அவருக்கும் அளிக்கப்படும் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
- எல்லையை கடந்து தான் நடந்து வர பத்து வருடத்திற்கும் மேலாக ஆனது என்றும், இனி இம்மாதிரியான சந்திப்புகள் அடிக்கடி நடைபெற வேண்டும் என்றும் கிம் தெரிவித்தார்.
- பழைய நிகழ்வுகள் குறித்து பேச வேண்டாம். முடிந்தவரை இனி சிறப்பாக செயல்படுவோம் என கிம் முன்னிடம் தெரிவித்தார்.
- பிற நாடுகள் பின்தொடர்வதற்கு எடுத்துக்காட்டாக கொரிய மக்கள் இருக்க வேண்டும் என்று முன் தெரிவித்துள்ளார்.
- இந்த சந்திப்பை ஒட்டி, வட கொரியாவின் உணவான குளிர்ந்த நூடுல்ஸை உண்ண உணவகங்களில் கூட்டம் கூட்டமாக தென் கொரிய மக்கள் காத்துகிடப்பதாக பிபிசி கொரிய சேவையை சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.






