‘திட்டமிட்டு சிக்கவைத்துவிட்டார்கள்! கொதிக்கும் கருப்பசாமி, முருகன்

நாங்கள் சாதரணமானவர்கள், நிர்மலா தேவியுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று கருப்பசாமியும் முருகனும் விசாரணையில் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிர்மலாதேவியுடன் மிக

நிர்மலாதேவியிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.சி.ஐ.டி-யின் கோரிக்கையை சாத்தூர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், அவர் மதுரை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். இந்தநிலையில், அவருக்கு நெருக்கமான உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள் கஸ்டடியில் எடுத்த போலீஸார் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். அதேபோல், மதுரைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த ஆய்வு மாணவர் கருப்பசாமியையும் 4 நாள்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டார்.

இருவரையும் ஒரே இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் விசாரித்தோம். ”நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் சென்னையிலுள்ள உயர் அதிகாரிகளும்தான் மிக மோசமானவர்கள். அவர்கள்தான் நிர்மலாவுடன் நெருங்கி இருந்தவர்கள். ஆனால், கடைசியில் எங்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் நல்லவர்களாகிவிட்டார்கள்” என்று இருவரும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் ஊடகத்தினரிடம் இன்னும் பல உண்மைகளைச் சொல்ல உள்ளதாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறியதாகத் தெரிகிறது. இரண்டு பேரிடமும் நிர்மலாதேவி லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லையாம். அந்த விவரங்களையும் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.