மண்டை உடைந்து வழிந்தோடிய ரத்தம்…கண்டுகொள்ளாமல் கடமையாற்றிய பொலிஸ்!

கல்வீச்சு சம்பவத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி மண்டை உடைந்து இரத்தம் கொட்டியும் தனது பணியை முடித்து விட்டு காயத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டது அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுதந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மகேந்திர சிட்டி உள்ளது. அந்த பகுதியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் லாவண்யா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் சாலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை அகற்றவிடாமல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணிநேரம் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்களை கலைந்துச்செல்ல பொலிசார் கூறியபோது விஷமிகள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தை சீராக்க மறியலில் ஈடுபட்டவர்களை பொலிசார் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கையில் கிடைத்த கற்களை கொண்டு பொலிசாரை தாக்கினர். இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ்குமார் ஹதிமானியின் மண்டை உடைந்தது.

ஆனால் அந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி , அவர் தலையில் ரத்தம் வழிவதை நிறுத்த கைக்குட்டையை வைத்து அழுத்தியபடி வாகன போக்குவரத்தை சீராக்கவும், இளம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.

இதை பொதுமக்களில் யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் போட்டுவிட அது வைரலாகி வருகிறது.